Dec 24, 2022

வழக்கு விவரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?

 ஒரு உரிமையியல் வழக்கினை தாக்கல் செய்யும் போது அதன் பிராது விவரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பது உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 7 ல் தெளிவு படுத்தப் பட்டுள்ளது. அதன்படி

- நீதிமன்றத்தின் விவரம், நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என்கிற விவரம்.

- தரப்பினர்கள் பெயர் விவரம் முகவரி, அவர்களில் இளவர், இயலாதவர் உள்ளனரா, அவர்கள் காப்பாளர் அல்லது முகவர் மூலம் முன்னிலை ஆகிறார்களா? என்கிற விவரம்.

- வழக்கிற்கான காரண காரியங்கள், சம்பவங்கள், வழக்குமூலங்கள் ஏற்பட்ட காலம் மற்றும் விவரம்.

- வாதி கோருகிற பரிகாரங்கள், அதற்கான நீதிமன்ற முத்திரைக் கட்டண விவரம்.

- சொத்து வழக்காக இருந்தால் சொத்தின் முழு விவரம் மற்றும் மதிப்பு, பண வழக்காக இருந்தால் அதன் மதிப்பு, கொடுக்கல் வாங்கல்  விவரம்.

- எதிர் தரப்பிற்கு உள்ள உரிமைகள் கடப்பாடுகள் விவரம்.

- உரிய காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்கிற விவரம்.

- வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் விவரப் பட்டியல். ஆவணங்கள் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை ஆவணங்கள் தன வசம் இல்லை என்றால், யாரிடம் உள்ளது என்கிற விவரம். அசல் ஆவணம் இல்லை என்றால் நகல் தாக்கல் செய்யலாம்.

ஒரு நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளும் முன் மேலே கண்ட விசயங்களை பார்த்துக் கொண்டால் போதும். 

அதே போல ஒரு நீதிமன்றம் எப்போதெல்லாம் வழக்கை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம் என்பதும், அல்லது வழக்கிற்கு எண் கொடுத்த பின்பு கூட நிராகரிக்கலாம் என்பதும் இதே கட்டளையில் சொல்லப் பட்டும் உள்ளது.

- வழக்கிற்கான காரண காரியம், வழக்கு மூலம் தெளிவாக இல்லாத போது,

- வழக்கினை குறைவாக மதிப்பிட்டு, குறைவான நீதிமன்ற கட்டணம் செலுத்தி இருந்து, அதை சரி செய்ய மறுக்கிற போது,

- வேறு சட்டங்களில் இத்தகைய வழக்கை சிவில் நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தடை செய்யப்பட்டிருக்கும் போது,

- வழக்குரைக்கு இரண்டு நகல்கள் தாக்கல் செய்யாத போது, ஒரு அசல் பிராது, ஒரு நகல் பிராது இருக்க வேண்டும்.

- வழக்குரைக்கு எண் தரப்பட்ட பின்னரும் ஏழு நாட்களுக்குள் எதிர் தரப்பிற்கு சம்மன் படி செலவுகள் செலுத்தாத போது,

என இவ்வளவு தான் காரணம் சொல்லப் பட்டுள்ளது. அவ்வாறு நீதிமன்றம் வழக்குரை முழுவதுமாக நிராகரித்தால் அதற்கு தெளிவான காரணத்தை சொல்ல வேண்டும். ஆக நீதிமன்றம் பார்க்க வேண்டிய முக்கியமான மூன்று விசயங்கள், (Jurisdiction) இந்த நீதிமன்றத்திற்கு வழக்கினை விசாரிக்க எல்கை , பணமதிப்பு மற்றும் சட்ட வரம்பு இருக்கிறதா? (Limitation) வழக்கு சரியான காலக் கெடுவிற்குள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? (Court Fee) வழக்கின் பரிகாரம் சொத்து மதிப்பு சரியாக கணக்கிடப்பட்டு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் செலுத்தப் பட்டு உள்ளதா? இவ்வளவு தான்.

ஆனால், பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை மட்டும் பார்ப்பதில்லை. அல்லது இதனோடு நிறுத்திக் கொள்வது இல்லை.

ஒருவேளை வழக்கில் திருத்தங்கள் இருந்தால், நீதிமன்றம் வழக்கு கட்டை திரும்ப தரும், சரி செய்து தாக்கல் செய்யலாம். அல்லது வேறு நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யலாம். வழக்கை திரும்ப தருவதோ, நிராகரிப்பதோ, புதியதாக வழக்கை மறுபடியும் தயார் செய்து தாக்கல் செய்வதற்கு ஒரு தடையாக அமையாது.

நீதிமன்றங்கள் அசல் ஆவணங்கள் வழக்குரை உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அவ்வாறு எந்த கட்டாயமும் இல்லை. அசல் ஆவணம் ஏன் இல்லை என்பதற்கு காரணம் சொல்வது, அல்லது அசலை ஒப்புமை படுத்தி பார்த்துக் கொள்ள காட்டினால் கூட போதுமானது.

உரிமையியல் விசாரணை முறை சட்டம், மனித அறிவின் அற்புதமான உருவாக்கம். ஒரு முழுமையான விதிமுறை தொகுப்பு. அதில் எங்கேயும் வழக்கை எண் தருவதற்கு என்று தனிப்பட்ட விதிமுறைகளை வகுக்கவில்லை. வழக்கில் இருக்க வேண்டியது இருந்தால் போதும் என்பது தான் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிரிவு 9 சிவில் நீதிமன்றங்களுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. மற்ற எந்த சட்டத்திலும் சிவில் நீதிமன்றம் இத்தகைய வழக்கை விசாரிக்க கூடாது என தடை செய்து இருந்தால் தவிர என்ன விதமான வழக்கையும் நாம் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.

அதனால், இனி வழக்கினை தாக்கல் செய்யும் முன் மேலே கண்ட அடிப்படையான விசயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி!

- த.செ.முசம்மில் மீரான். வழக்கறிஞர், திருவைகுண்டம்.


Dec 12, 2022

சட்ட புத்தகங்களை நம்பலாமா?

 எல்லாம் பொய்யா கோப்ப்பால்...

நிறைய சட்ட புத்தகங்கள் என் அலமாரியில் இருக்கிறது. உரிமையியல் விசாரணை முறை சட்டத்தின் தமிழ் விளக்கவுரை எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததில் இருந்து, அதன் பெரிய சைஸ் புத்தகங்களை எடுத்து பார்த்த பின்னர் தான் ஒரு விசயம் புரிந்தது. ஆங்கிலத்தில் உள்ள Bare Act களில் மத்திய அரசின் சட்டம் மட்டுமே இருக்கிறது தவிர மாநில அரசின் சட்ட திருத்தங்கள் கிடையாது. சரி, ஒருவேளை ஏடிசி, கிரி போன்ற பதிப்பங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களிலாவது இருக்குமா என்றால் அதும் இல்லை. ஆக இவ்வளவு நாள் ஆய்வின்றி ஒரு குருட்டு போக்கில் சட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறோம் என உணர்ந்த பின் தோன்றியது...

உதாரணமாக, கட்டளை 41 விதி 1 மேல்முறையீடு தாக்கல் செய்ய "Copy of Judgement" இணைக்க வேண்டும் என உள்ளது. இந்த copy என்ற வார்த்தைக்கு முன்பாக Certified என்கிற வார்த்தை சேர்க்க 1963 லேயே சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. ஆனால் சட்ட புத்தகத்தில் அவ்வாறு இல்லை.
 
13-08-2021 அரசிதழில் வந்தது முதலாக, இதே விதியில் "or Computerized" என்கிற வார்த்தை மட்டும் உயர்நீதிமன்றம் சட்ட திருத்தம் மூலம் சேர்க்கப்படுகிறது. அதை "mechanically reproduced" என்கிற பதம் இருப்பதற்கு அடுத்து சேர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த "mechanically reproduced" என்கிற பதமும் Bare Act புத்தகத்தில் இல்லை, அத்துடன் தமிழ் மொழிபெயர்ப்பிலும் இல்லை. அந்த வார்த்தைகள் இதற்கு முன்னர் எந்த ஆண்டு சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டது என்பதும் நமக்கு தெரியாது.
 
நான் போன வருடம் வாங்கிய சட்ட புத்தகத்தில் இல்லையென்றால், நீதிமன்றத்தில் இருக்கும் பழைய சட்ட புத்தகங்களில் நீதிபதிகளுக்கு இது காணக் கிடைக்குமா?
 
இந்த விதியின் பொருள், மேல்முறையீடு தாக்கல் செய்ய தீர்ப்பின் சான்றிட்ட நகல் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அது Mechanically Produced (டைப் அடித்த அல்லது ஜெராக்ஸ்) ஆகவும் இருக்கலாம். Computerized (இணையத்தில் தரவிறக்கப் பட்ட நகல்) ஆகவும் இருக்கலாம். இல்லையா!
 
என்னிடம், நீதிபதியிடமும் உள்ள சட்ட புத்தகத்தில் இல்லாத ஒரு விதி உண்மையிலேயே இருக்கிறது. ஆனால் அதை எடுத்துக் காட்ட முடியாமல் எப்படி நாம் நீதிபதியிடம் அல்லது நீதிமன்ற ஊழியரிடம் புரிய வைக்க முடியும்? சொல்லுங்கள்.
 
நீதிபதி ஐயா இந்த விதிப்படி நான் மேல்முறையீடு செய்ய நீதிமன்ற சான்றிட்ட நகல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழ் கோர்ட்டு நீதிபதியின் தீர்ப்பை ecourt இணைய தளத்தில் இருந்து தரவிறக்கி இத்துடன் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
 
இந்த விதியில் மதராஸ் உயர்நீதிமன்ற திருத்தங்கள் என்னவெல்லாம் செய்து உள்ளது. LawRato தளத்தில் கிடைத்தது.
 
Madras amendments in
Order XLI Rule 1
 
(i)
in sub-rule (1),
before, the word "copy", insert the word "certified"
 
(ii)
to sub-rule (1), insert the following words, namely:-
"The copy of the judgment shall be printed copy in every case in which the High Court has prescribed that the judgment shall be printed when a copy is applied for, for the purpose of appeal."
 
(iii)
in sub-rule (1) insert the following proviso, namely:-
"Provided that, in appeals from decrees or Order under any special or local Act to which the provisions or Parts II and III of the Limitation Act IX of 1908, do not apply and in which certified copies of such decrees or Orders have not been granted within the time prescribed for preferring an appeal, the Appellate Court may admit the memorandum of appeal subject to the production of the copy of the decree or Order appealed from within such time as may be fixed by the Court."
 
(iv)
in sub-rule (1), insert the following further proviso and Explanation, namely:
"Provided further that when the decree appealed from is a final decree in partition suit with Schedules attached thereto, the Appellate Court may dispense with the production of the copy of the decree, if the appellant filed a certified copy of the judgment appealed against and produces also a certificate from the Lower Court as to the value of the subject-matter of the proposed appeal."
"Explanation.-The words 'Appellate Court' in sub-rule (1) be deemed to include the Registrar of the High Court, where the appeal is preferred to the High Court." (w.e.f. 25-12-1963)
 
(v)
in sub-rule (2), at the end, insert the following words, namely:-
"The memorandum shall also contain a statement of the valuation of The appeal for the purposes of the Court-fees Act."
 
இவ்வளவு விஷயங்கள் என் புத்தகத்தில் இல்லை. உங்களிடமும் உள்ள புத்தகங்களிலும் தேடினாலும் இருக்கப் போவதில்லை. உயர்நீதிமன்ற தளத்திலும் எல்லா திருத்தங்களும் பதிவேற்றம் செய்யப் படுவதில்லை. இதனால் தான் referrence புத்தகங்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அவற்றை வருடா வருடம் வாங்கிட வசதிப்படாது. அல்லது சென்னை உயர்நீதிமன்ற திருத்தங்கள் மட்டும் சேர்க்கப்பட்ட சட்ட புத்தகம் எதும் இருந்தாலும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்.
 
ஆனா பாருங்க, மேலே Lawrato தளத்தில் கிடைத்த High court Amendments விவரங்களிலும், Mechanically Reproduced என்கிற வார்த்தை இல்லை என்பது பெரும் சோகம். அப்போஅது எப்போது சேர்க்கப்பட்டது எங்கே போய் தேடுவது?

இதே போல இன்னொரு விதி சென்னை உயர்நீதிமன்றம் , உரிமையியல் விசாரணை முறை சட்டத்துல சேர்த்து இருக்கு. ஆனா உங்க புத்தகத்துல இந்த விதி இருக்கப் போறது இல்லை. 2021 வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் நாள் அரசிதழ் ல வெளியானது முதல் இந்த விதி அமலுக்கு வந்தாகி விட்டது.
உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 20 இல் புதியதாக விதி 21 சேர்க்கப்படுது.

 " 21. Certified copies of decree to be furnished : Certified copies of decree shall be furnished to the parties on application to the court and at their expense as far as possible within thirty days from the date of receipt of the application."

நகல் மனு தாக்கல் செய்து 30 நாட்களுக்குள் உத்திரவின் சான்றிட்ட நகல் வழங்க வேண்டுமென இந்த விதி கூறுகிறது. அது நடக்குதோ இல்லையோ இப்படி ஒரு விதி இருப்பது நமக்கு, நீதிபதிகளுக்கு தெரியுமா?

அதனால், நான் Bare Act வெளியிட்டுள்ள Professional Publishers க்கும், தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ள ஐயா திரு.புலமை வெங்கடாசலம் அவர்களுக்கும் உயர்நீதிமன்ற திருத்தங்களை புத்தகத்தில் சேர்க்க கேட்டு கடிதம் எழுதினேன். புலமை வெங்கடாசலம் அவர்களிடம் இருந்து அழைப்பும் வந்தது. அடுத்த பதிப்புகளில் சேர்ப்பதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து உள்ளார். நல்ல விஷயம்.

வாசிப்பிற்கு நன்றி! தொடர்வோம்..

 

- த.செ.முசம்மில் மீரான் 

    வழக்கறிஞர், திருவைகுண்டம்-தூத்துக்குடி.

 

  

 

விபத்து வழக்குகளை சமாதானமாக முடிக்கலாமா?

 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A


அவசரம் மற்றும் அஜாக்கிரதையால், குற்றமுறு கொலை அல்லாது, மரணத்தை விளைவிக்கும் நபர், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து, தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

 

விபத்தில் நபர் இறந்து விடுகிறார், இப்போது இறந்த நபரின் குடும்பம், குற்றம் சாட்டப்பட்ட நபருடன் சமாதானமாக போவதாக வழக்கினை முடித்துக் கொள்ள முடியுமா? 

Gian Singh -vs- State of Punjab என்கிற வழக்கில் இவ்வாறு முடிக்கப்பட்டாலும் கூட, அதன் பின் வந்த உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளில், இத்தகைய வழக்குகளை சமாதானமாக முடிக்க முடியாது என்பதே உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bhajan Lal Sharma -vs- State of NCT delhi வழக்கில் இவ்வாறு முடிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும்,

Sadha Singh -vs- State of Punjab வழக்கில், இவ்வாறு சமாதானம் செய்து கொள்ள அனுமதிப்பது, பணம் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற என்னத்தை ஏற்படுத்தி விடும் என்றும்,

Hari Singh -vs- Sukhbir Singh வழக்கில், விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு காப்பீடு கிடைக்க பல சட்டப்பூர்வ வழிகள் உள்ளது. அதனால், குற்றம் சாட்டப்படும் நபரிடம் பணம் பெற்றுக் கொண்டு வழக்கை முடிக்க அனுமதிக்க முடியாது. உயிரை விலை பேசி விற்பது போல ஆகிவிடும். என்றும்,

State of Karnataka -vs- Sharanappa Basagouda Aregoudar  என்கிற வழக்கில், விபத்துகள் சமூகத்தின் மீதான குற்றம், இறந்தவர் குடும்பத்திற்கு பணம் கொடுப்பதால் வழக்கு ரத்தானால், குற்றவியல் நீதிமுறை கட்டமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விடும் என்றும்,

Dalbir Singh -vs- State of Punjab வழக்கில், தண்டனை என்பது குற்றம் புரிந்த நபருக்கும், மற்றவர்களுக்கும் சட்டத்தின் மீது அச்சத்தினை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டும் என்றும், சொல்லப்பட்டுள்ளது.

அதனால், இது போன்ற அஜாக்கிரதை கவனக்குறைவு விபத்து மரண வழக்குகளை, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் முடிக்க கேட்டாலும், வழக்கை முடித்து தள்ளுபடி செய்வது கூடாது. 


- த.செ. முசம்மில் மீரான்,

    வழக்கறிஞர், திருவைகுண்டம், தூத்துக்குடி.

  

 

 


Nov 15, 2022

தாமதம் நீதியை கொன்று விடும்!

 கால வரையறை சட்டம் (Limitation Act) ஒவ்வொரு வழக்கு மற்றும் மனு தாக்கல் செய்வதற்கும், கால அளவை நிர்ணயித்து, அந்த காலம் எந்த நாளில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் பட்டியல் இட்டுள்ளது.


அவ்வாறு உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாது போனால், அச்சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் தனியே, கால தாமதத்தை மன்னிக்க கேட்டு மனு செய்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த விதிவிலக்கான பிரிவு 5 ஆனது, வழக்குகள் தாக்கல் செய்யவோ அல்லது தீர்ப்புகளை செயல்படுத்த நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்வதற்கோ பொருந்தாது.

உதாரணமாக, ஒரு சொத்து மீட்பு வழக்கு தாக்கல் செய்ய, பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் இருந்து 12 ஆண்டுகள் கால வரையறை, அது போல ஒரு நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நிறைவேற்றுதல்  மனு தாக்கல் செய்யவும் 12 ஆண்டுகள் கால வரையறை உள்ளது. இந்த கால நிர்ணயம் வழக்கின் தன்மையை பொறுத்து மாறும். 

பண வழக்குகள் தாக்கல் செய்ய, ஒப்பந்தம் அல்லது ஆவண தேதி அல்லது தவணை தேதி அல்லது இறுதியாக பணம் செலுத்தப்பட்ட அல்லது ஒப்புக் கொண்டு உயிர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் கால வரையறை. அதன் பின்னர் தாக்கல் செய்யும் வழக்குகள் ஏற்கதக்கது அல்ல.

நாம் பார்க்க போகும் இந்த வழக்கில் வாதிக்கு 3 ஆண்டுகள் கால வரையறை முடிந்து, அதன் பின் 375 நாட்கள் தாமதம் ஆகி விட்டது. வழக்கு தாக்கல் செய்யும் போது தனது தாமதத்தையும் மன்னிக்க கேட்டு வாதி பிரிவு 5 இன் கீழ் மனுவுடன் சேர்த்தே பிராதை தாக்கல் செய்கிறார்.


உச்சநீதிமன்றம் வரை போய், கால வரையறை முடிந்த பின்னர் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், இதே நிபந்தனை உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 21 இன் கீழ் வருகிற நிறைவேற்றுதல் நடவடிக்கை களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு, வாதியின் வழக்கு நிராகரிக்க பட்டது சரியென உத்தரவிட பட்டது.

கால வரையறை என்பது உரிமையியல் வழக்குகளின் அடிப்படை. காலம் கடந்த வழக்குகளை நீதிமன்றம் துவக்கத்திலேயே நிராகரித்து விட முடியும். Limitation Defeats Equity எனப்படும். வழக்கு கொண்டு வருபவரின் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் சரி, அவர் சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தை கடந்து வழக்கு தாக்கல் செய்தால் அது நிராகரிக்க பட வேண்டியது என்பதாகும். 

" Vigilantibus non dormientibus aequitas subvenit" - இந்த லத்தீன் பதத்தின் பொருள் "சட்டம் விழிப்புடன் இருப்பவருக்கு துணை நிற்கிறது. தூங்குபவருக்கு உதவுவது இல்லை" (Equity assists the vigilant and not those who sleep on their rights)

வழக்கு தாக்கல் செய்ய மட்டும் தான் கால வரையறை சட்டமா, வழக்கு முடிக்க எந்த கால வரையறையும் இல்லையா என்று கேட்டால், இருக்கிறது ஆனால் (செயலில்) இல்லை... 😐

இந்த பதிவினை காணொளி ஆக முகநூல் பக்கத்தில் காணலாம்.

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி!

- த. செ. மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.
தொடர்பு கொள்ள @advmeerantj

Nov 13, 2022

Order 1 Rule 2 - Civil Procedure Code

கட்டளை 1  விதி  2

உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908


ORDER  1  :  PARTIES

RULE  2  :  POWER OF COURT TO ORDER SEPARATE TRIALS

 

" Where it appears  to the court that any joinder of parties may embarrass or delay the trial of suit, the court may put the plaintiffs to their election or order separate trails or make such other order as may be expedient. "


" தரப்பினர்களின் சேர்க்கை வழக்கு விசாரணையை சங்கடப்படுத்தும் அல்லது தாமதப்படுத்தும் என நீதிமன்றத்திற்கு தோன்றும் போது, நீதிமன்றம் வாதிகளையே தேர்வு செய்ய விட்டுவிடலாம், அல்லது தனிதனி வழக்கு விசாரணை நடத்த கட்டளையிடலாம், அல்லது சூழ்நிலைக்கு தக்கதென தோன்றும் வேறு உத்திரவினை பிறப்பிக்கலாம்."


முந்தைய கட்டளை 1 விதி 1  விதியில் யாரெல்லாம், எதன் அடிப்படையில் ஒன்று சேர்ந்து அல்லது தனித்து வாதிகளாக இருந்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்பதை பார்த்தோம். அதனை Dominus Litus என்கிறார்கள். வாதிக்கு என்ன வழக்கு, என்ன பரிகாரம், யார் மீது, யாருடன் சேர்ந்து என்பதை தீர்மானித்துக் கொள்ள இருக்கிற உரிமை அது. 

இந்த விதியில், ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களா வாதிகளாக சேர்ந்து வழக்கு தாக்கல் செய்கையில், நீதிமன்றம் அதை அனுமதிப்பது அல்லது மாற்றி அமைப்பது, அல்லது நீதிமன்றம் நாடினால் மறுக்கவும் முடியும் என்பதை பற்றி பேசுகிறது.

உதாரணமாக, பல முதலீட்டாளர்கள் சேர்ந்து ஒரே நிறுவனத்திற்கு எதிராக வழக்கிடுகிரார்கள் என வைத்துக் கொள்வோம். இங்கே ஒவ்வொருவரின் தனித்த உரிமையும் நீதிமன்றம் தனித்தனியாக ஒரே வழக்கில் தீர்மானிக்க மிகவும் சிரமப்படும். அல்லது ஒவ்வொருவரும் தனித்தனியாக சாட்சிய விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டி இருக்கலாம். தனக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று ஏலம் எடுப்பவர்கள் சேர்ந்து ஒரே வழக்கிட முடியுமா? நீதிமன்றம் யாருக்கு முன்னுரிமை வழங்க முடியும்? இது குழப்பம் இல்லையா? அதனால் தான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்கும் விதமாக இந்த விதி உள்ளது.

அதே நேரம், ஒரே வழக்கில் ஒரு நபரே தனக்காகவும் தன்னுடைய நிறுவனத்திற்காகவும் என ஒன்றுக்கு மேற்பட்ட வாதிகளாக இருக்க முடியும். ஒரு பூசாரி தனக்காகவும், கோயிலின் நிர்வாகி நிலைமையில் என இருவராக இருக்க முடியும். ஒரு நபர் தன் தனிப்பட்ட சொத்திற்க்காகவும் குடும்ப சொத்திற்க்காகவும் பாகதாரர் நிலைமையிலும் ஆக்கிரமிப்பிற்கு எதிராக வழக்கிட முடியும். ஒரு பெற்றோர் தனக்காகவும், தனது மைனர் குழந்தைகளுக்கு காப்பாளர் நிலைமையிலும் வாதிகளாக வழக்கிட முடியும். 

இது போன்ற பல வாதிகள் இருக்கும் வழக்கில், வழக்கு விசாரணையை சிக்கலின்றி நடத்தும் நோக்கிலும்,  நீதிமன்றம் அல்லது வாதிகளின்  உளத்தேர்விற்காகவும், இந்த விதி செயல்படும்.

இதுவரையில் வாசித்து இருந்தால், தங்களின் கற்றல் ஆர்வத்தினை பாராட்டுகிறேன். தங்களின் வருகைக்கு நன்றி!

எனது வீடியோ பதிவுகளை Law In Tamil - Legally Simplified சேனலில் பார்வையிடலாம்.


- த.செ.முசம்மில் மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.

என்னை தொடர்பு கொள்ள - @AdvMeeranTJ



Nov 3, 2022

Order 1 Rule 1 - Civil Procedure Code

கட்டளை  1  விதி  1

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908

 

ORDER  1   :  PARTIES 

RULE  1  :  WHO MAY BE JOINED AS PLAINTIFFS

" All persons may be joined in one suit as plaintiff where -

        (a)  any right to relief in respect of, or arising out of, the same act or transaction or series of acts or transactions is alleged to exist in such persons, whether jointly, severally or in the alternative; and

        (b)  if such persons brought separate suits, any common question of law or fact would arise.  "

 

ஒரே வழக்கில் பல நபர்கள் வாதிகளாக சேர்க்கப்படலாம் எப்போதெனில்,

        (அ)   ஒரு உரிமை அல்லது பரிகாரம், ஒரே செய்கை அல்லது பரிமாற்றம், அல்லது தொடர்ச்சியான செய்கைகள் அல்லது பரிமாற்றங்கள் பொருட்டு எழுந்து, நபர்களிடத்தில் இருப்பதாக கருதுமிடத்து, கூட்டாகவோ தனியாகவோ அல்லது வேறு வகையில், மற்றும்,

        (ஆ)  அத்தகைய நபர்கள் தனித்தனியாக வழக்குகளை கொண்டு வரும் போது, சட்டம் அல்லது சங்கதி பற்றிய பொதுவான கேள்வி எழும் போது,

  வாதிகளாக யாரெல்லாம் சேர்ந்து வழக்காடலாம் என்பதை பற்றி இந்த விதி பேசுகிறது. எதிர்த்து வழக்காடும் பிரதிவாதிகளைப் பற்றி அல்ல. வழக்கில் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டு உள்ளது சரியா தவறா என கேள்வி எழுப்ப வேறு விதி உள்ளது. அதே போல வாதிகளாக சேர்த்து வழக்காட தகுதிநிலை உள்ளதா என்பதும் கேள்வியாக எழுப்பப் படலாம். இந்த விசயங்கள் யாவும் அடிப்படை யானவை என்பதால் வழக்கின் துவக்கத்திலேயே கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்க வேண்டும். தீர்ப்பிற்கு பின்னர் சரி தவறென்று வாதிட இயலாது. வழக்கின் ஆரம்பத்திலேயே தரப்பினர்கள் சேர்க்கப்படாமல்  விடப்பட்டதாக வாதிடப்படும் போது பின்னர் அவர்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப் படலாம். வழக்கில் சேர்க்கப்பட மேற்படி புதிய தரப்பினரின் விருப்பம் கேட்கப்படுதல் அவசியம் அல்ல.

    வாதிகளாக சேர்க்கப்படும் நபர்கள் இடையே பொதுவான ஒரு உரிமை இருக்க வேண்டும். அல்லது வழக்கு எழுவதற்கு அவர்களுக்குள் பொதுவான ஒரு காரணம் (வழக்கு மூலம்) இருக்க வேண்டும். வழக்கில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய விஷயம் (வழக்கெழு வினா) ஏதேனும் ஒன்று பொதுவாக இருந்தாலும் போதும். இது தான் தனித்து வழக்கு தாக்கல் செய்ய அல்லது வாதிகளாக வழக்கில் உடனிணைந்து கொள்ள ஒரு நபருக்கு தகுதி இருக்கிறதா இல்லையா என்பதை தீர்மானிக்கிறது.

    ஒரு வங்கியில் கடன் வாங்கிய அனைவரையும் ஒன்றாக சேர்த்து, அல்லது ஒரு வங்கியின் மீது நபர்கள் பலர் சேர்ந்து வழக்கிட முடியுமா என்றால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் வங்கியுடனான உறவு தனித்தனி ஒப்பந்தம் மூலம் எழுந்து உள்ளதால், அவர்கள் வாதிகளாக பிரதிவாதிகளாக ஒன்றிணைய முடியாது. வழக்கு எழுவதற்கான விஷயம் (வழக்குமூலம்) இங்கு ஒன்றாக இல்லை. ஆனால், அதுவே ஒரு ஊர் அல்லது ஒரு சமுதாயம் சார்பாக ஒரு நபர் மட்டும் பிரதிநிதி ஆக இருந்து வழக்காட முடியும். அதற்கு தனி விதி வகை செய்கிறது. இதில் ஊரில் உள்ள நபர்கள் அனைவருக்கும் ஒரே உரிமை, வழக்கு மூலம் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

    இதற்கு முன்னர் இந்த விதியில், வாதிகள் அனைவருக்கும் ஒரே வழக்கு மூலம் ஏற்பட்டு இருந்தால் மட்டுமே வாதிகளாக இணைய முடியும் என்றிருந்து, பின்னர் 1976 முதல் வாதிகள் அனைவருக்கும் பொதுவான ஒரு உரிமை இருந்தாலே போதும் என்றானது. இதைத்தான் விதியின் இரண்டாவது நிபந்தனையில், பொதுவான ஒரு சட்டம் அல்லது சங்கதி பற்றி நீதிமன்றம் தீர்மானிக்க இருந்தால் போதும் என சொல்லப்பட்டுள்ளது.

    உதாரணத்திற்கு,

        ஒரு நபர் இரண்டு நிறுவனங்களின் பெயரை சேர்த்து அல்லது பகுதியாக பயன்படுத்தி தன்னுடைய பொருளை விற்க முயல்கிறார் என்றால், அந்த நபருக்கு எதிராக தடை கேட்டு இரண்டு நிறுவனங்களும் வாதிகளாக இனைந்து வழக்காட முடியும்.

    ஒரு நபரின் வீட்டை சுற்றி நாலாபுறமும் இருக்கும் நபர்களால் சிக்கல் வருகிறது என்றால், அவர் அந்த நான்கு பேர்களின் மீதும் சேர்த்து வழக்கிட முடியும். நான்கு வீடுகளின் பாதையை ஒரு நபர் அடைத்து வைத்திருந்தால், அந்த ஒருவர் மீது இவர்கள் நால்வரும் சேர்ந்து ஒரே வழக்கு தாக்கல் செய்ய முடியும்.

    வாரிசு வழியில் சொத்தை அடைந்த முதல் நபர் அதில் ஒரு பகுதியை இரண்டாம் நபருக்கு கொடுக்கிறார். ஆனால் அந்த சொத்துக்கு தான் வாரிசு என மூன்றாவது நபர் சொந்தம் கொண்டாடினால், முதலிரண்டு நபர்கள் சேர்ந்து மூன்றாமவர் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். இரண்டாவது நபர் வாரிசுரிமை கீழ் வரவில்லை என்றாலும், சொத்தில் ஒரு பகுதி அளவு உரிமை ஏற்பட்டுள்ளது.

தீர்மானிக்க வேண்டிய பிரச்சினை ஒன்று, அல்லது ஒரே விதமான உரிமை என்பது தான் இங்கு அடிப்படை.

    வாதியோடு சமாதானமாக போய்விட்ட ஒரு பிரதிவாதி தன்னை வாதியாக மாற்றி சேர்த்துக் கொள்ள கேட்க முடியாது. அவர்  தன்னுடைய உரிமையை பொறுத்து மற்ற பிரதிவாதிகளுக்கு எதிராக அதே வழக்கில் அல்லது தனியே வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டியது தான்.

    இன்னும் அற்புதமாக, பழைய சட்டத்தில் "Right to any relief" என்று இருந்ததை புதிய சட்டத்தில் "Any Right to relief" என்று திருத்தம் செய்துள்ளார்கள். any என்கிற ஒரு வார்த்தை இடம் மாறுவதால் என்னவாகிடப் போகிறது என நாம் நினைக்கலாம். ஆனால், பழைய சட்டத்தின் படி வாதியாக இருக்கிறவருக்கு (any relief) நீதிமன்றம் ஏதேனும் பரிகாரம் வழங்க வேண்டும், அல்லது வழக்கில் வாதியாக இருப்பவர் தனக்கு எதாவது பரிகாரம் நீதிமன்றத்திடம் கோரியிருக்க வேண்டும். இல்லையேல் அவர் வழக்காட தகுதி பெறவில்லை, அவர் வாதியாக இருக்க முடியாது. ஆனால் புதிய சட்டப்படி வழக்கில் சேர்க்கப்பட அவருக்கு (any right) ஏதாவது உரிமை இருந்தாலே போதும். அவர் வழக்கில் எந்த பரிகாரமும் கேட்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. இங்கு தான் அவசியத் தரப்பினர் என்கிற பதம் உண்டாகிறது. ஒரு நபருக்கு உரிமை இருந்தால் போதும், அவரைப் பொறுத்து வழக்கு மூலம் எதுவும் எழவில்லை என்றாலும், அவர் அவசியத் தரப்பினர் என்பதால் வழக்கில் வாதியாக இருக்கிறார். உதாரணமாக ஒரு குடும்பம் குடிவசிப்பதை சிலர் இடைஞ்சல் செய்கிறார்கள், அவர்களுக்கு எதிரான வழக்கில் அந்த வீட்டில் வசிக்காத வெளியூரில் வேலை பார்க்கும் நபரும் வாதியாக சேர்க்கப்படலாம். இடைஞ்சல் என்கிற வழக்குமூலம் அந்த நபரை பொறுத்து ஏற்படா விட்டாலும் கூட, அவருக்கு ஒரு உரிமை இருப்பதால் வாதியாக சேர்க்கப்படலாம் தவறில்லை.

    உரிமை என்பது தனித்தனியாகவோ அல்லது சேர்ந்தோ இருக்கலாம், என்று சொல்லப்பட்டிருக்கும் அதே வேளையில், இந்த விதியில் "or in alternative" என சேர்க்கப்பட்டுள்ளதன் மூலம், ஊர் மக்களின் சார்பாக ஊர் தலைவர் பிரதிநித்துவ வழக்காடுவதும், ஒரு நிறுவனம் அல்லது வழிபாட்டுதலங்கள் போன்ற செயற்கை நபர்கள் சார்பாக பிரதிநிதிகள் வாதிகளாக இருக்கலாம் என்பதும் உறுதி செய்யப்படுகிறது.

    வாதிகளாக சேர்ந்து வழக்காட வராவிட்டால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்துக் கொள்ளலாம். உதாரணமாக கூட்டு குடும்ப சொத்து ஒன்று ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வழக்கு தாக்கல் செய்ய வேண்டியதாகிறது, பாக உரிமைதாரர்கள் அனைவரும் சேர்ந்து வழக்காட வரவில்லை என்றால் அவர்களை பிரதிவாதிகளாக சேர்த்து, அவர்களின் உரிமையும் அங்கிகரித்து அவர்களுக்கும் சேர்த்து பரிகாரம் தேடிக் கொள்ள முடியும். 

 

வழக்குத் தீர்வு :

Sh Jiwanand Jiwan and others -vs- The Himachal Pradesh Housing and Urban Developement Authority

" வாதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனைக்கு, தனித்தனியாக பிரதிவாதியுடன் தனிப்பட்ட ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்கள். வாதிகள் ஒவ்வொருவரின் வழக்கு மூலமும் வேறுவேறானது. வாதிகளின் வழக்கு ஒரே செயல், அல்லது தொடர்ச்சியான ஒரே செய்கையினால் நிகழவில்லை. எனவே  வாதிகள் கூட்டாக சேர்ந்து வழக்கிட தகுதியற்றவர்கள்"

 

அடுத்த விதி  :  Order  1  Rule  2

 

தங்களின் வருகைக்கு நன்றி!

 

எனது வீடியோ பதிவுகளை Law in Tamil - Legally simplified சேனலில் பார்க்கலாம்.

 

- த.செ.முசம்மில் மீரான், வழக்கறிஞர் , ஸ்ரீவைகுண்டம்.

    என்னை தொடர்பு கொள்ள @AdvMeeranTJ

Nov 2, 2022

Civil Procedure Code in Tamil

 

 உரிமையியல் விசாரணை முறை சட்டம் 1908

Index: 

- கட்டளை 1 விதி 1

- கட்டளை  1  விதி  2

இது அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு நடைமுறை சட்டம். ஏனெனில் பல்வேறு சட்டங்களுக்கு அதை எவ்வாறு செயல்படுத்துவது என்று நடைமுறைகளோ விதிகளோ வகுக்கப்பட்டிருக்காது. அவ்வாறான சூழலில், அத்தகைய சட்டங்கள் அடிப்படையில் விசாரணை நடத்தும் நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள் பொதுவாக இந்த விசாரணை நடைமுறை சட்டத்தின் படியே செயல்படும். அதனால் இது பல்வேறு இடங்களில் செயல்படக் கூடிய ஒரு பொதுவான சட்டம். அத்துடன் சிறு சிறு திருத்தங்களை தவிர்த்து இந்தியா முழுக்கவும் ஒரே மாதிரியான நடைமுறைகளை கொண்டது.

இது மனித அறிவின் அற்புதமான படைப்பு. ஒரு உரிமையியல் வழக்கு எப்படி நடத்த வேண்டும் என்பதை படிப்படியாக அற்புதமாக விவரிக்கும் நடைமுறை நூல். ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும், ஒவ்வொரு பரிமாணத்தில் புதிய விசயங்களை எனக்கு தரத் தவறியதில்லை. 

இதற்கு தமிழில் புத்தகங்கள் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை, என்னிடமும் இருக்கிறது. நான் எழுதப் போவது சட்ட மொழியாக்கம் மட்டும் அல்ல. அதில் இருந்து நான் கற்றுக் கொண்டதும், எனது அறிவு விளங்கிக் கொண்டதும், ஆங்கிலத்தில் விளக்க புத்தகங்களில் விரிவாக உள்ளதும், பல்வேறு வழக்குகளில் உயர்நீதிமன்றங்கள், உச்ச நீதிமன்றங்கள் கொடுத்துள்ள விளக்கங்கள் என விரிவாக. அத்துடன் ஒரு உரிமையியல் வழக்கறிஞராக ஒவ்வொரு முறையும் வழக்குகளில் புதிதாக நான் கற்றறியும் விசயங்களையும் சேர்த்துக் கொள்வதற்காக. அதனால் இந்த தொடர் பதிவுகள் அவ்வப்போது Update செய்யப்பட்டுக் கொண்டே இருக்கலாம். புத்தகமாக எழுதி வெளியிடுவதை விட, வலைப்பக்கத்தில் எழுதுவதில் இந்த வசதி இருக்கிறது. எனது புத்தகம் எவ்வளவு விற்கும் என்பதில் நான் கவலைப்பட வேண்டி இருக்கும் ஏனெனில் லாப நஷ்டம் இருக்கிறது. ஆனால் எனது வலைப்பக்கத்தில் எவ்வளவு பேர் வாசிப்பார்கள் என்ற கவலை கூட எனக்கு இல்லை. Google இருக்கும் வரை இந்தப்பக்கம் உயிருடன் இருக்கும் என்று நம்புகிறேன்.

உரிமையியல் விசாரணை முறை சட்டம் ஒரு சிறிய சட்டம் அல்ல. தமிழாக்கம் வேண்டுமானால் சிறிய புத்தகமாக இருக்கலாம். இந்த தொகுப்பை எப்போது எழுதி முடிப்பேன் என்பதில் எந்த கால வரையறையும் உறுதியும் என்னால் கொடுக்க முடியவில்லை. ஆனால் எழுத வேண்டும் என்று எண்ணித் துணிந்து விட்டேன். இந்த முயற்சியை துவங்க எனக்கு உத்வேகம் அளித்தது எலன் மஸ்க்கின் வார்த்தைகள். பழைய நாகரிகங்களை பாருங்கள், ஆச்சரியப்படும் அளவு கட்டுமானங்களை பிரமீடுகளை செய்திருக்கிறார்கள். நம்முடைய தஞ்சை கோயிலை கூட எடுத்துக் கொள்வோம். நம்மால் இப்போது அவற்றை செய்ய முடியாதது ஏன். முன் சந்ததிகளின் அறிவை நாம் பெற்றுக் கொள்ளவில்லை அவ்வளவு தான். பண்டைய அறிவு அவர்களோடு அழிந்து விட்டது. Sharing knowledge is the meaning of Human Existence என்கிறார். ஒவ்வொருவரும் அவரவர் சொந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. நான் என் வாழ்நாளில் என்ன கற்றுக் கொள்கிறேனோ அதை நான் விட்டுச் செல்ல வேண்டும்.

தொடரலாம். இறைவன் நாடினால்.

Jul 29, 2022

வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிப் போனதால் காப்பீடு நிறுவனம் இழப்பீடு தராதா?

ஒவ்வொரு வாகனத்திற்கும் இத்தனை நபர்களை  தான்  ஏற்றிப்  போக வேண்டும் ,  இவ்வளவு  எடை  தான் ஏற்ற  வேண்டும்  என்று குறிப்பிடப்  பட்டு இருக்கும். ஆனால் எல்லா நேரமும் மக்கள்  அதை  பின்பற்றப்  போவதில்லை . பேருந்துகளை எடுத்துக்கங்க  இருக்கை  எண்ணிக்கைக்கு  தான் ஆட்களை  ஏற்றுகிரார்களா?

 இப்போ அதிக நபர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்துக்கு உள்ளாகினால் வாகனத்தின் சேதத்திற்கு  இழப்பீடு கிடைக்குமா?

 ஒரு வழக்கை  பார்க்கலாம்.

லக்ஷ்மி சந்த்  என்பவரு  ரிலையன்ஸ்  ஜெனரல்  இன்சூரன்ஸ்  நிறுவனத்துல  அவரோட  வாகனத்திற்கு  காப்பீடு  செய்து  இருந்திருக்கார்.

வாகனம்  விபத்திற்கு உள்ளாகுது.  வாகன  சேதத்தை  அவரே  செலவு  செய்து சரி செய்துடுறார். அப்புறமா செலவு  பண்ண  தொகைக்கு கிளைம்  கேட்கிறார். முதல்ல  நிறுவனம்  குறைத்து  மதிப்பீடு  செய்யுது.  அடுத்ததா  நிறுவனம்  ஒரு குழு விசாரணைக்கு  அனுப்பி,  அவரு  அதிகமா ஆட்களை  ஏற்றி  சென்றதை தெரிஞ்சுக்குது. அதனால், வண்டியோட அனுமதிக்கப்பட்ட  எண்ணிக்கைக்கு  அதிகமா ஆட்களை  ஏற்றியதால  எந்த  இழப்பீடும்  நிவாரணமும்  கிடையாது  என்று நிறுவனம் மறுத்து விடுது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் போயாச்சு. இப்போ உச்ச நீதிமன்றம் தீர்ப்புல சொன்ன விசயங்கள் தான் எது தவறு எது தவறு இல்லை என்பதை நமக்கு சுட்டிக் காட்டுது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புல சுட்டிக் காட்டக் கூடிய ஒரு வழக்கு,  " பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில்  அதிகமான  நபர்களை  ஏற்றி  சென்றதை  மட்டுமே வைத்து, வாகன உரிமையாளர், காப்பீட்டின் அடிப்படை விதிமுறை களை மீறி விட்டதாக நாம் கருத முடியாது. அதிக நபர்களை  ஏற்றிச் சென்ற காரணத்திற்காக மட்டும் காப்பீடு நிறுவனம் அதன் கடமையில் இருந்து தப்பி விட முடியாது - D.V.Nagaraju  -vs-  Oriental Insurance Company Limited .

லக்ஷ்மி சந்த் உடைய வாகனம் எதிரில் அஜாக்கிரைதையாக வேகமாக ஊட்டி வந்த வாகனத்தால் மோதப்பட்டு, சேதம் ஆனதாக FIR சொல்லுது. வாகனத்துல அதிக நபர்களை ஏற்றியதால தான் விபத்து நேர்ந்தது என காப்பீடு நிறுவனம் நிருபிக்கல. அதனால, லக்ஷ்மி சந்த் வாகனத்தில் ஆட்களே இல்லை என்பதோ அல்லது அதிகமான ஆட்கள் இருந்தார்கள் என்பதோ கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் இல்ல. அதை அடிப்படையா வச்சு இழப்பீடு மறுத்ததும் தவறு.

அதனால், உச்சநீதிமன்றம் லக்ஷ்மி சந்த்திற்கு முழு இழப்பீடு கிடைக்க வேண்டும் என உத்தரவிட்டதோட தேவையில்லாம அவர உச்ச நீதிமன்றம் வரைக்கும் அலைய விட்டதற்கு இருபத்தைந்தாயிரம் வழக்கு செலவு தொகையும் கொடுக்க காப்பீடு நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

Lakshmi Chand -vs- Reliance General Insurance Limited

ஆனால், ஒரு விஷயத்தை நாம கவனத்தில் வைத்துக் கொள்ளணும். அதிக நபர்களை ஏற்றி அதன் காரணமாக விபத்து நேர்ந்து இருந்தால் இந்த தீர்ப்பு முற்றிலும் மாறி இருந்திருக்கும். அப்படி தீர்ப்பு கிடைத்தால் அதையும் பகிரலாம்.

வருகைக்கு நன்றி!

 

அடுத்த பதிவில் சந்திக்கலாம்.


- த.செ.முசம்மில் மீரான்,

வழக்குரைஞர்,

திருவைகுண்டம்.

Jul 25, 2022

நான் எப்போது சாவது?

ஒரு குட்டிக் கதை...

அரசன், எதிரிகளை வயப்படுத்தும் சில சித்துவித்தைகளை அறிந்துகொள்ள விரும்பினான். தன் தலைமை அமைச்சரிடம் யாரிடம் கற்றுக் கொள்வது எனக் கேட்டான்.


அமைச்சரும், "ஒரு அடர்ந்த அத்துவானக் காட்டில், தனித்த முனிவர் தவம் செய்து வருகிறார். அவருக்கு அந்த வித்தை அத்துப்படி என்கிறார்கள். அவரிடம் கற்றுக் கொள்ளலாம்" என்றார்.
ஆனால் அதில் இருந்தது ஒரு சிக்கல். "முனிவரை நாம் இருக்குமிடத்திற்கு வர வைக்க முடியாது நாம் தான் அவரிடத்திற்கு சென்றாக வேண்டும்" என்றார்.

அரசன், தனது குதிரைப் பரிவாரங்களுடன் ஆரவாரமாக கிளம்பி விட்டான். முனிவர், கண் திறக்க காத்திருந்து, பணிவாகத் தன் கோரிக்கையை முனிவர் முன் வைத்தான்.

முனிவர், "நான் செத்த பின்பு தான் உன்னால் என் வித்தைகளை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

மன்னன், குழப்பத்துடன் தன் கூடாரத்துக்கு திரும்பி விட்டான். இரவு உருண்டு பிரண்டாலும் உறக்கம் மட்டும் வரவேயில்லை. முனிவர் செத்த பின்னர் அவரிடம் இருந்து எப்படி கற்றுக் கொள்ள முடியும் என்பது விளங்காமல், அரசனுக்கு விடிந்தும் விட்டது. மறுபடியும் அதிகாலையில் அரசன் முனிவரை தேடிப் போனான். முனிவர் மனம் மாறி இருப்பார், சொல்லித் தருவார் என நம்பினான். ஆனால் இம்முறையும்,

முனிவர், "நான் செத்த பின்பு தான் உன்னால் வித்தைகளை கற்றுக் கொள்ள முடியும்" என்று சொல்லி விட்டு கண்ணை மூடிக் கொண்டார்.

அரசனுக்கு, கோபம் தலைக்கேறி நாடு திரும்பி விட்டான். அமைச்சரிடம், "முனிவர் பேசுவது பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது. அவர் செத்த பின்பு எப்படி நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள முடியும்" என எரிச்சலடைந்தான்.

அமைச்சர், நிதானித்து யோசித்தார். அரசனை மேலும் கீழும் பார்த்தார். "மன்னா தாங்கள் அவரிடம் மாணவராக செல்லாமல், மன்னர் தோரணையில் சென்றதால், உங்களின் நான் என்கிற அகந்தை செத்த பின்பு தான் கற்றுக் கொள்ள முடியும் என்பதை தான் முனிவர் அப்படி கூறியிருக்கிறார்" என விளக்கினார்.

மன்னன் இந்த இரவும் உறங்கவில்லை. அவனது மனம் பல விஷயங்களை குறித்து யோசித்தது. நான் என்கிற அகம்பாவம் அழிந்த பின்னர் அவனுக்கு எவரையும் வசியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்ந்து  கொண்டான். மறுபடியும் முனிவரை தேடி செல்ல வேண்டிய தேவை அவனுக்கு ஏற்படவில்லை.

முற்றும்.

Apr 21, 2022

ஒரு தேசம் எப்படி அழியும்? - இலங்கையும் இந்தியாவும்!

 


A Nation Borns STOIC; Dies EPICURIEN


என்கிற சொல்லாடலை வாசிக்க கிடைத்தது. இதன் அர்த்தம் என்ன என்பதை தெரிந்து கொண்டேன்.


Stoic தத்துவம் எதை நம்மால் கட்டுப்படுத்த முடியுமோ அதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்கிறது. எதிர்காலத்திற்காக இன்று உழைக்க வேண்டும். உதாரணமாக ஒரு மரத்திற்கு விதை நடுவது போல. கடந்து சென்ற காலங்கள் அனைத்தும் இறந்து போனவை. நாளை என்பது ஒரு நாள் இன்று என்றாகி விடும், அதாவது எதிர்காலம் ஒருநாள் நிகழ்காலமாக ஆகும். இன்னும் விளக்கமாக இன்றைய நாள் என்றோ ஒருநாள் எதிர்காலமாக இருந்திருக்கும். ஆக எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும் அதற்கு நிகழ்காலத்தில் தியாகங்கள் செய்யலாம். இவர்களை பொறுத்த வரை, ஒருமுறை தான் பிறக்கிறோம், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித் தான் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். 


Epicurien வகையினர், நாளை என்பது நிச்சயமில்லை, இன்றே வாழ்வோம் என்பவர்கள். வாழ்வது ஒருமுறை தான் அதை விரும்பியபடி வாழ வேண்டும் என்கிற கொள்கையினர்.


ஒரு தேசம் கட்டமையும் போது, அதனை உருவாக்க, அதன் சுதந்திரத்திற்கு முன்னோர்கள் இரத்தம் சிந்தி, உயிரைக் கொடுத்து பல தியாகங்களை செய்து இருப்பார்கள். அதனால் ஒரு தேசம் பிறக்கும் போது Stoic ஆக பிறக்கிறது. சில தலைமுறைகள் கடந்த பின்னர் முன்னோர்களின் தியாகங்களின் வலியும் வடுக்களும் மறந்தும் மறைந்தும் போய் விடுகிறது. மக்கள் அவரவர் நலனுக்காக Epucurien வாழ்க்கையை எடுத்துக் கொள்கிறார்கள். தேசம் அழியத் துவங்குகிறது. இலங்கை என்னும் வாழ்ந்து கெட்ட தேசத்தை கண்முன்னே காண்கிறோம். இரு சகோதரர்களின் நலனுக்காக ஒரு தேசம் பலியாகிறது.


இதுவே தான் பெரிய குடும்பங்களிலும் நடக்கிறது. பூஜ்ஜியத்தில் இருந்து உருவான குடும்பங்கள் மூன்று தலைமுறைகளின் மறுபடியும் பூஜ்ஜியத்தை அடைந்து விடுகின்றனவாம். 

 ( குடும்பங்களுக்கும் Stoic தத்துவம் அவசியம் என நான் நினைக்கிறேன். ஆனால், எச்சரிக்கை இந்த தத்துவங்கள் உங்களின் மத நம்பிக்கைகளுக்கு விரோதமாக இருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலோ, ஒரு மூச்சு பயிற்சி போன்றோ எடுத்துக் கொண்டால் உண்மையில் மனதை தெளிவுபடுத்த கூடிய அருமையான விஷயம் தான். )


எர்னஸ்ட் ஹெமிங்க்வே சொல்வது போல, அழிவு என்பது அணுகுண்டு போட்டு ஒரே நாளிலோ, அல்லது கொரோன போல புதுவித கொள்ளை நோய் மூலமோ தான் வர வேண்டும் என்பதில்லை. உதாரணமாக ரோம் நகரம் அழிந்து போனது. அதற்கு நூறு ஆண்டுகள் ஆனது. மக்கள் தங்கள் தேசம் அழிந்து கொண்டிருக்கிறது என்பதை உணராமலே அது நடந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் சிரமத்தை நோக்கி சென்றார்கள்.


முதலில் பொருளாதாரம் தான் பலியாகும். வேலைவாய்ப்பு குறையும். பொருட்களின் விலை ஏறும். மக்கள் ஏழைகள் ஆவார்கள். குடும்பத்திற்கு உணவளிப்பதே பெரும்பாடாகி விடும். கடன் உயரும். முதலீடுகள் ஓடிவிடும். அறிவுத் திறமை குறையும் அல்லது திறனுள்ளவர்களும் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். அரசாங்கத்திற்கு இவை அனைத்தும் தங்கள் தவறில்லை என்றும், அல்லது மூடி மறைப்பது திசை திருப்புவது மட்டுமே வேலையாக இருக்கும். அரசாங்கம் மக்களை நம்ப வைக்கும் வேலைகளை செய்யும், விழிப்புணர்வு வராமல் பார்த்துக்கொள்ளும். அதை கல்வியாகவே கற்பிக்கும், ஊடகங்கள் வழியாக திரும்ப திரும்ப பரப்பும். அதிகாரத்தில் ஆட்சியில் இருப்பது மட்டுமே முக்கியமாகி கடுமையான சட்டங்கள் இயற்றப்படும். சமூகத்தில் மனிதர்களின் அத்தனை நல்ல குணங்களும் காணாமல் போய் விடும். தனது குடும்பத்திற்கு உணவளிக்க குற்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கும். அத்துடன் மக்கள் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களில் தங்களை இணைத்துக் கொள்வார்கள். இந்த குழுக்கள் அரசாங்க ஆசி பெற்றதாகவும், பறித்துக் கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மக்கள் நிகழும் மாற்றங்கள் எதையும் விளங்கிக் கொள்ளாமலே வாழ்வார்கள்.


இந்த ஆருடங்கள் எல்லாம் பயமுறுத்துகிறது. இலங்கை மக்கள் தங்கள் நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள இயலாத அளவிற்கு, மொழி இனம் மத ரீதியான தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கு உட்படுத்தப் பட்டு இருக்கிறார்கள்.