Nov 9, 2021

தாத்தா சொத்தை அப்பா விற்க முடியுமா? விற்றால் செல்லுமா?

வருகைக்கு நன்றி!

 

தாத்தா சொத்து பேரனுக்கு சொந்தம். கொள்ளி வச்ச பேரனுக்கு தான் சொத்து போகும் என்பதெல்லாம் கிராமங்களில் மக்களிடம் இருக்கும் நம்பிக்கை தானே தவிர சட்டத்தில் அப்படி எதுவும் இல்லை.


கிறிஸ்தவ , இஸ்லாமிய வாரிசுரிமை சட்டங்களின் படி தகப்பனார் உயிரோடு இருக்கும் போது தாத்தாவின் சொத்து பேரப் பிள்ளைகளுக்கு இறங்காது. அதனால் அதை விட்டு விடலாம். ஆனால் இந்து வாரிசுரிமை சட்டத்தில் பூர்வீக சொத்து என்ற ஒன்று இருப்பதால், பேரப்பிள்ளைகளுக்கு பிறக்கும்போதே பூர்வீக சொத்தில்உரிமை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இந்த வழக்கில், சொத்து தாத்தாவின் பெயரில் உள்ளது. தகப்பனார் அதை விற்று விடுகிறார். பேரன் அதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்து, விற்றது செல்லாது என்று விளம்புகை செய்யவும், பாகப்பிரிவினையும் கோருகிறார். விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆகி விடுகிறது. முதல் மேல்முறையீட்டில் அனுமதிக்கப்படுகிறது. அதனால் இரண்டாம் மேல்முறையீட்டிற்கு மாண்பமை உயர்நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது.

உயர்நீதிமன்றம் பின்வரும் விசயங்களை குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்து விடுகிறது.

முதலில், சொத்து தாத்தாவின் பெயரில் உள்ளது. அவர் எந்த உயிலும் எழுதி வைக்கவில்லை. சொத்து பூர்வீக சொத்து என்பதற்கு, அதாவது 4 தலைமுறை தாண்டி வந்த பாகம் பிரியாத சொத்து என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சொத்து தாத்தாவின் பெயரில் இருந்தால், அது அவரின் சொந்த சம்பாத்திய சொத்து ஆகவே கருத வேண்டும். மேலும் தாத்தா 1956 ஆம் ஆண்டிற்கு பின், அதாவது இந்து வாரிசுரிமை சட்ட திருத்தத்தின் பின் இறந்துள்ளார். அதனால் இந்து வாரிசுமை சட்டம் பிரிவு 8 இன் படி முதல்நிலை வாரிசான மகன் என்ற அடிப்படையில், சொத்து தந்தைக்கே போய் சேரும். தந்தையின் கையில் இருக்கும் சொத்து பூர்வீக சொத்து என்ற தரத்தில் இருக்காது. அதனால் தந்தை அதனை தனது சொந்த சொத்து போல உரிமை மாற்றம் செய்வதற்கு முழு உரிமை கொண்டவர். தந்தை ஏற்படுத்திய கிரைய ஆவணங்கள் செல்லும்.


மேலும் பேரனுக்கு சட்டப்படி சொத்தில் எந்த உரிமையும் இல்லை என்பதால், இந்த வழக்கு தாக்கல் செய்ய அவருக்கு தகுதிநிலை (locus standi) இல்லை. அதனால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, விசாரணை நீதிமன்றத்தின் தள்ளுபடி உத்திரவு உறுதிசெய்யப்பட்டது.


படிக்க : IndianKanoon


சுருக்க வீடியோவாக தமிழில் மற்றும் ஆங்கிலத்தில்.


-வழக்குரைஞர். த.செ.முசம்மில் மீரான்,

  திருவைகுண்டம்.

Facebook - Twitter - Instagram

Jun 5, 2021

பத்திர பதிவிற்கு அசல் ஆவணம் அவசியமா?

பத்திரம் பதிவு செய்ய..

சார் பதிவாளர் அலுவலகத்தில் உரிமையாளரின் அசல் ஆவணம், பட்டா, தீர்வை முதலியன கேட்பார்கள்.

அசல் ஆவணம் தொலைந்து போயிருந்தால், அது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்து கிடைக்கப் பெறவில்லை என்று சான்று பெற்று, நாளிதழில் விளம்பரம் கொடுத்து, அதன் பின் நகல் ஆவணத்தை கொண்டு பத்திரம் பதிய வேண்டி இருக்கும். 

ஆனால், இந்த விதிகள் பதிவு சட்டத்திலோ அல்லது பதிவு விதிகளிலோ கிடையாது. இது பதிவுத் துறை சுற்றறிக்கை மூலம் உருவாக்கப்பட்ட வழிகாட்டு விதிமுறைகள் ஆகும்.

இந்த விதிமுறைகள் சட்டப்படியானவை அல்ல என்றும், பத்திரம் பதிய வருபவர்கள் சரியான நபர்களா என்பதை கவனித்தால் போதும் என்றும், பதிவு செய்வதற்கு அசல் ஆவணம் கட்டாயம் இல்லை என்றும், அதன் காரணமாக பதிவு செய்ய மறுக்க கூடாது என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு தீர்ப்பை சார் பதிவாளர்கள் புரிந்து கொண்டால், பொது மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப்படும்.

தீர்ப்பின் இணைப்பு ஆங்கிலத்தில் வாசித்துக் கொள்ளலாம்.

தமிழில் காணொளி யாக வெளியிட்டுள்ளேன்.


நன்றி!

- த. செ. முசம்மில்மீரான்,
  வழக்குரைஞர்
  திருவைகுண்டம்.

பின்குறிப்பு:

இந்த வழக்கின் தீர்ப்பை பின்பற்றி 11-02-2021 ஆக அண்மையில் உயர்நீதிமன்றம் மற்றொரு வழக்கின் Sivanadiyan -vs- The SubRegistrar தீர்ப்பில் மறுபடியும் அசல் ஆவணம் இல்லை என்று பத்திர பதிவை மறுக்க கூடாது என உறுதி படுத்தியுள்ளது. இந்த தீர்ப்பை பகிர்ந்த நண்பர் வழக்கறிஞர் விஜயன் அவர்களுக்கு நன்றி. அவரது குரல் பதிவை கீழே கேட்கலாம்.


Jun 4, 2021

நிற்கும் போது மயங்கி விழாமல் நம்மை பாதுகாப்பது எது?

நாம் படுத்திருக்கும் போது நமது உடல் சமநிலையில் உள்ளது. ரத்த ஓட்டம் சீராக பாய்கிறது. ரத்த அழுத்தமும் ஒரே நிலையில் இருக்கிறது.

இதிலிருந்து நாம் எழுந்து நிற்கும் போது ஏற்படக்கூடிய ரத்த அழுத்த மாறுபாட்டால் உயர்வால், நாம் மயங்கி விழ வேண்டும்.ஆனால் அவ்வாறு நிகழ்வதில்லை. 

இதற்கு காரணம் இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லக் கூடிய இரத்த நாளங்களோடு இணைந்து உள்ள Barereceptors என்கிற நரம்புகள். இவை மத்திய நரம்பு மண்டலத்தையும், மூளை இரத்த ஓட்டத்தையும் இணைக்கின்றன. மூளை இரத்த ஓட்டத்தில் ஏற்படக் கூடிய மாறுதல்கள் மீது உடனடியாக செயல்படுகின்றன. இதை BaroReflex என்று சொல்கிறார்கள். 

குறைவான இரத்த அழுத்தத்தின் போது மயக்கம் தோன்றும் சமயம், அல்லது அதிக இரத்த அழுத்தத்தின் காரணமாக மாரடைப்பு,பக்கவாதம்,இதய செயலிழப்பு முதலியவை உடனடியாக ஏற்பட்டு விடாமல், தாங்கும் சக்தியாக இந்த நரம்புகள் செயல்படுகின்றன.

சரி, இது உடற்கூறு. இதில் நாம் அறிந்து கொள்ள என்ன இருக்கிறது?

இந்த நரம்புகள் செயல்பட தூண்டுகின்றன புரதங்கள் PIEZO1, PIEZO2 ஆகியவை கண்டறியப் பட்டுள்ளது. இந்த புரதங்களின் கட்டமைப்பு அறியப்பட்டு, இவை உருவாகத் தூண்டக் கூடிய மூலக்கூறு கண்டறியப் பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புகள் மனிதனுக்கு எவ்வாறு உதவும்?

தற்போது உயர் இரத்த அழுத்த பிரச்சினைகளுக்கு உள்ள மருந்துகளில் முன்னேற்றம் ஏற்படும். தலைசுற்றல் பிரச்சினை உள்ளவர்களுக்கு தீர்வு கிடைக்கும்.

இதில் இரத்த அழுத்தம் தொடர்புடைய  உடலியக்க மற்றும் தொற்றா நோய்கள் கிருமிகள்  உண்டாக்குவது இல்லை. கிருமித் தொற்றுகளை உடலின் நோயெதிர்ப்பு பார்த்துக் கொள்கிறது. ஆனால் அதே நோயெதிர்ப்பு சக்தி உடலின் இயக்க  சீர்கேடுகளை தாக்குவதாலேயே Auto Immune Disease கள் ஏற்படுகின்றன. இது போல உடலியக்க தூண்டுதல்கள் தொடர்புடைய மூலக்கூறுகள் கண்டறியப் படுவது, தொற்றா நோய்களையும் தீர்க்கும் வழிகளை தரும்.

- த.செ. முசம்மில் மீரான் BE.,BL.,
  வழக்குரைஞர்,
  திருவைகுண்டம். 

Feb 20, 2021

ஆன்லைனில் ஆர்டிஐ தகவல் கட்டணம் செலுத்துவது எப்படி

Details Updated 11-02-2023
 
 
இப்போது கருவூலம் இணையதளம் மூலம் தகவல் உரிமை சட்ட மனுக்களின் தகவலுக்கான நகல் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம். PayTM , GooglePay போன்ற UPI applications பயன்படுத்தியும் செலுத்தலாம்.


முதலில் இந்த தளத்தில்நுழையுங்கள்.

👉  karuvoolam echallan 👈

எந்த பயனர் பெயரும் கடவுச்சொல்லும் தேவையே இல்லை.

இந்த படிவத்தில் சிவப்பு * கட்டாயமாக தரப்பட வேண்டிய தகவல். அதில் முதலில் தங்கள் பெயர், அலைபேசி எண், முகவரி, ஊர், அஞ்சல் பின்கோடு, மின்னஞ்சல் முதலியவற்றை நிரப்பிக் கொள்ளுங்கள். இது எதையும் தமிழில் கொடுக்க வேண்டாம். Challan அச்சிடும் போது தமிழ் வரவில்லை.


 Period details என்பதில் from date மற்றும் to date இரண்டும் ஒன்று தான். பணம் செலுத்தும் நாளையே குறிப்பிடுங்கள். முன்னர் OTP validation இருந்தது இப்போது அது இல்லை.

 

Department Details பகுதியில்

District : PAO chennai secretariat

Service Receiving Department : 03501 Human Resources

DDO Name : 44010051 - Section Officer


Service Details பகுதியில்

Service Rendering Department : 03501 Human Resources

தேர்வு செய்து விட்டு Generate Services அழுத்தவும்.

Receipt Type : Right To Information Fees

Sub Type : Right To Information Fees

இதை தேர்வு செய்த உடன் ACCT Code கட்டத்தில் 0070 60 118 AA 22739  என்பது வந்து விடும்.

 அடுத்து இருக்கும் துறையின் குறிப்பு எண் என்பதில் உங்களுக்கு பணம் செலுத்த வந்த கடிதம் எண் குறிப்பிடலாம். குறிப்புகள் பகுதியில் எந்த அலுவலகம் எதற்காக பணம் செலுத்துகிறீர்கள் என தெளிவாகும் படி சுருக்கமாக கொடுங்கள்.

இப்போது  செலுத்த வேண்டிய தொகையை குறிப்பிட்டு, Payment GateWay என்பதில் State Bank of India என்பதையும் Payment Method Online  என்பதையும் தேர்ந்தெடுங்கள். Submit கொடுத்ததும், SBIMOPS என்கிற வங்கியின் இணைய தளத்திற்கு செல்லும். அதில் கட்டண விவரங்கள் உடன் கீழே QR code என்று இருப்பதை தேர்ந்தெடுங்கள்.

அலைபேசியின் Gpay Paytm Phonepe ஏதேனும் ஒரு செயலி மூலம் QR Code Scan செய்து கட்டணம் செலுத்தி, Success என்கிற செய்தி வரும் வரை காத்திருங்கள். பின்னர் வங்கி இணையதளத்தில் இருந்து கருவூலம் தளத்திற்கு தானாக மாறும் வரை காத்திருங்கள். திரையில் Download Challan என்று வரும். அதை அச்சிட்டு கட்டண ரசீதாக அனுப்பிக் கொள்ளலாம்.

அவ்வளவு தான். மிக எளிது!

இனி 4 ரூபாய் தகவல் கட்டணத்திற்கு பெட்ரோல் போட்டு போய், வரிசையில் காத்திருந்து செலுத்த அவசியமில்லை.

நன்றி. 

இந்த தகவல் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென கருதினால், இந்த பதிவின் இணைப்பை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன். 👍

இந்த பதிவின் சுருக்க சுட்டி

bit.ly/rti-fees-pay-online

- த. செ. முசம்மில் மீரான்,

வழக்குரைஞர்

திருவைகுண்டம்