Apr 12, 2019

குற்றவியலின் மூன்று தத்துவங்கள்


குற்றவியலின் மூன்று அடிப்படைத் தத்துவங்களும், அவற்றை விளக்கும் முக்கிய வழக்குகளும் இங்கே
1. அரசுத்தரப்பு குற்றத்தை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்க வேண்டும்.

சந்தேகத்தின் பலன் குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கப்பட வேண்டும்.
2.  குற்றம் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபணம் ஆகும் வரையிலும், குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி யாகவே கருதப்படுவார்.
3.   விசாரணைகள் மற்றும் நிருபிக்கும் பொறுப்பு அரசுத்தரப்பில் இருந்து மாறுவதில்லை.

இந்த மூன்று அடிப்படைகளையும் மனதில் வைத்துக் கொண்டால் ஒரு குற்றவியல் வழக்கை பகுத்தாய்வது மிக எளிதாகிவிடும்.

Apr 3, 2019

அமைதிகாக்கும் உரிமை

ஒரு குற்ற வழக்கு விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் அமைதியாகவே இருந்தால், சந்தேகத்திற்கிடமானதாக எடுத்துக் கொள்ளலாமா?

முன்னதாக குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் நிரூபிக்கப்படும் வரை நிரபராதி என அனுமானிக்க பட வேண்டும் என்பதை பார்த்தோம். மேலும் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு குற்ற விசாரணையின் போது அமைதியாக இருக்கும் உரிமையும் உள்ளது. அவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணையின் போது அமைதியாக இருப்பதினால் அந்த குற்ற வழக்கு அவருக்கு எதிராக தீர்மானிக்கப்பட வேண்டும் என்பது இல்லை.

நமது அரசியலமைப்புச் சட்டம் உறுப்பு 20 (3) ‌ இல் எந்த ஒரு நபரும் தனக்கு எதிராகத் தானே சாட்சி சொல்ல கட்டாயப்படுத்த படக்கூடாது என சொல்லப்பட்டுள்ளது.

பன்னாட்டு உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான பட்டயத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. . இதில் குற்றவியலின் அடிப்படை உரிமைகளான, சட்டப்படியாக மட்டுமே கைது செய்ய வேண்டும் என்பது உறுப்பு 9.1 லும் எதற்காக கைது செய்யப்படுகிறோம் என்கிற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும் என்பது 9.2 லும் முறையான விசாரணைக்கான உரிமை 11.3 லும் தனக்கு எதிராகத் தானே சாட்சி சொல்ல கட்டாயப்படுத்த கூடாது என்கிற உரிமை 14.3 லும் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும் கூட சூழ்நிலை சாட்சியம் நேரடி சாட்சியம் ஆகிய முதல்நிலை வழக்கிற்கான நிருபணங்கள்  இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவரின் அமைதி அவருக்கு எதிராக பயன்படுத்தப்படலாம்.

அரசுத் தரப்பே குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என்பது குற்றவியலின் அடிப்படையாக இருந்த போதிலும் சில சமயங்களில் இவ்வாறான நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் திரும்பிவிடுகிறது.

ஒப்பந்த மீறல்கள், மாற்றுமுறை ஆவணச் சட்டம், ஊழல் ஒழிப்புச் சட்டம்,  சுங்கவரி சட்டம் ஆகியவற்றின் கீழான புகார்களில் குற்றம் சாட்டப்பட்ட நபரை தன்னை குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.

 அரசியலமைப்பு வழங்கியுள்ள இந்த அமைதி காக்கும் உரிமை உரிமையியல் வழக்குகளில்  செல்லுபடியாகாது.

Mar 31, 2019

வழக்கு பதிந்தாலே குற்றவாளியா?

ஒருவர் மீது ஒரு குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விட்டதாலேயே அவரை சட்டம் குற்றவாளியாக கருதி விடுகிறதா?

இல்லை! பெரும்பாலும் இல்லை!

அனைத்து நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் ( Universal Declaration of Human Rights ) அதன் ஷரத்து 11 ல் இவ்வாறு கூறப்படுகிறது,
"Everyone charged with a penal offense has the right to be presumed innocent, until proved guilty according to the law in a public trial "
குற்றம் சாட்டப்பட்ட நபர் சட்டத்தின்படியான விசாரணை நடைபெற்று குற்றவாளி என தீர்மானிக்கப்படும் வரையில் அவரை நிரபராதியாகவே அனுமானிக்க வேண்டும். இது குற்றவியலின் அடிப்படையான விதியாகும்.

அவ்வாறு அவரை குற்றவாளி என சட்டத்தின் படியாக, தகுந்த சாட்சிகளோடு நிரூபிக்க வேண்டியது, அரசுத் தரப்பின் பொறுப்பாகும். அந்த பொறுப்பு குற்றம் சாட்டப்பட்டவரின் மீது எப்போதும் இல்லை.  பின்வரும் சட்டப்பதம் இதற்குப் பொருத்தமானது.
"ei incumbit probatio qui dicit non qui negat " -  'The burden of proof is on the one who declares, not on the one who denies' .

குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை குற்றமற்றவர் என்று நிறுவ தகுந்த சாட்சியங்களை முன்னிலைப்படுத்தா விட்டாலும் அது அவர் மீதான குற்றமுறையீட்டை சரி என்றாக்கி விடாது. இது தொடர்பாக மாண்பமை உச்சநீதிமன்றம் பின்வரும் தீர்ப்பில் விவரித்துள்ளது.
Kali Ram - vs- State of Himachal Pradesh ( 1973 AIR 2773 )
 ஆனால் இந்த அனுமானம் மாற்று முறையாவணங்கள், லஞ்சம், குடும்ப வன்முறை, தேசவிரோத குற்றம் தொடர்பான முறையீடுகளில் அதிகம் கருத்தில் கொள்ளப்படுவதில்லை.


Mar 24, 2019

நல்வரவு!


அன்புடையீர்!

எனது வலைப்பக்கத்திற்கு தங்களை  மகிழ்வுடன் வரவேற்கிறேன்!
இந்த பக்கம் நான் கற்றறிந்த விசயங்களை தங்களோடு பகிர்ந்து கொள்வதற்காக ஏற்படுத்தி உள்ளேன்.

வழக்கறிஞர் தொழிலில் கற்பதற்கு முடிவே இல்லை என்பதால் , இத்தொழிலை "Legal Practice " என்றே குறிப்பிடுகிறார்கள்.
சட்டம் பற்றிய அறியாமை மன்னிக்கப்பட முடியாதது. எழுதப்படிக்க தெரியாத குடிமகனும் நாட்டின் அனைத்து சட்டத்தையும் அறிந்தவனாக இருப்பான் என்பதே சட்டத்தின் அனுமானம்.
ஆனால் நிதர்சனம் அவ்வாறில்லை.

சட்டங்களும் அதன் உட்பிரிவுகளும், வழக்கறிஞர் வாசித்து வாதாடுவதற்காக மட்டுமே அல்ல. நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் சட்டம் பற்றிய விழிப்புணர்வு அவசியம். நமது உரிமைகள் எதுவும் வீடு தேடி வந்து விடுவதில்லை. ஒவ்வொரு உரிமைகளையும் காப்பாற்றிக் கொள்ள போராடித் தான் ஆக வேண்டியுள்ளது. சட்டப்படியாக உரிமைகளைப் போராடிப் பெற்றுக் கொள்ளவே அனுமதிக்கப்பட்டுள்ளது, அவரவர் பலத்தைப் பிரயோகித்து பெற்றுக் கொள்வதற்கல்ல.

ஒரு வழக்கறிஞராக மட்டுமில்லாமல், ஒரு குடிமகனாகவும் எனது இந்த வலைப்பக்கத்தினை, கற்றறிந்த தோழமை வழக்கறிஞர்களுக்கும், சாதாரண மக்களுக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் சுருக்கமாகவும் எழுதிட முயற்சிக்கிறேன்.

தொடர்ந்து வாசித்து ஆதரவளிக்கவும்!
தொடர்ந்து எழுதிட ஊக்கமளிக்கவும்!


நன்றி! 👍