Dec 24, 2022

வழக்கு விவரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?

 ஒரு உரிமையியல் வழக்கினை தாக்கல் செய்யும் போது அதன் பிராது விவரத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பது உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 7 ல் தெளிவு படுத்தப் பட்டுள்ளது. அதன்படி

- நீதிமன்றத்தின் விவரம், நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை விசாரிக்க அதிகார வரம்பு உள்ளதா என்கிற விவரம்.

- தரப்பினர்கள் பெயர் விவரம் முகவரி, அவர்களில் இளவர், இயலாதவர் உள்ளனரா, அவர்கள் காப்பாளர் அல்லது முகவர் மூலம் முன்னிலை ஆகிறார்களா? என்கிற விவரம்.

- வழக்கிற்கான காரண காரியங்கள், சம்பவங்கள், வழக்குமூலங்கள் ஏற்பட்ட காலம் மற்றும் விவரம்.

- வாதி கோருகிற பரிகாரங்கள், அதற்கான நீதிமன்ற முத்திரைக் கட்டண விவரம்.

- சொத்து வழக்காக இருந்தால் சொத்தின் முழு விவரம் மற்றும் மதிப்பு, பண வழக்காக இருந்தால் அதன் மதிப்பு, கொடுக்கல் வாங்கல்  விவரம்.

- எதிர் தரப்பிற்கு உள்ள உரிமைகள் கடப்பாடுகள் விவரம்.

- உரிய காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்கிற விவரம்.

- வழக்கிற்கு தேவையான ஆவணங்கள் விவரப் பட்டியல். ஆவணங்கள் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை ஆவணங்கள் தன வசம் இல்லை என்றால், யாரிடம் உள்ளது என்கிற விவரம். அசல் ஆவணம் இல்லை என்றால் நகல் தாக்கல் செய்யலாம்.

ஒரு நீதிமன்றம் வழக்கை எடுத்துக் கொள்ளும் முன் மேலே கண்ட விசயங்களை பார்த்துக் கொண்டால் போதும். 

அதே போல ஒரு நீதிமன்றம் எப்போதெல்லாம் வழக்கை ஏற்றுக் கொள்ள மறுக்கலாம் என்பதும், அல்லது வழக்கிற்கு எண் கொடுத்த பின்பு கூட நிராகரிக்கலாம் என்பதும் இதே கட்டளையில் சொல்லப் பட்டும் உள்ளது.

- வழக்கிற்கான காரண காரியம், வழக்கு மூலம் தெளிவாக இல்லாத போது,

- வழக்கினை குறைவாக மதிப்பிட்டு, குறைவான நீதிமன்ற கட்டணம் செலுத்தி இருந்து, அதை சரி செய்ய மறுக்கிற போது,

- வேறு சட்டங்களில் இத்தகைய வழக்கை சிவில் நீதிமன்றம் விசாரிக்க கூடாது என தடை செய்யப்பட்டிருக்கும் போது,

- வழக்குரைக்கு இரண்டு நகல்கள் தாக்கல் செய்யாத போது, ஒரு அசல் பிராது, ஒரு நகல் பிராது இருக்க வேண்டும்.

- வழக்குரைக்கு எண் தரப்பட்ட பின்னரும் ஏழு நாட்களுக்குள் எதிர் தரப்பிற்கு சம்மன் படி செலவுகள் செலுத்தாத போது,

என இவ்வளவு தான் காரணம் சொல்லப் பட்டுள்ளது. அவ்வாறு நீதிமன்றம் வழக்குரை முழுவதுமாக நிராகரித்தால் அதற்கு தெளிவான காரணத்தை சொல்ல வேண்டும். ஆக நீதிமன்றம் பார்க்க வேண்டிய முக்கியமான மூன்று விசயங்கள், (Jurisdiction) இந்த நீதிமன்றத்திற்கு வழக்கினை விசாரிக்க எல்கை , பணமதிப்பு மற்றும் சட்ட வரம்பு இருக்கிறதா? (Limitation) வழக்கு சரியான காலக் கெடுவிற்குள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதா? (Court Fee) வழக்கின் பரிகாரம் சொத்து மதிப்பு சரியாக கணக்கிடப்பட்டு நீதிமன்ற முத்திரைக் கட்டணம் செலுத்தப் பட்டு உள்ளதா? இவ்வளவு தான்.

ஆனால், பெரும்பாலான நீதிமன்றங்கள் இதனை மட்டும் பார்ப்பதில்லை. அல்லது இதனோடு நிறுத்திக் கொள்வது இல்லை.

ஒருவேளை வழக்கில் திருத்தங்கள் இருந்தால், நீதிமன்றம் வழக்கு கட்டை திரும்ப தரும், சரி செய்து தாக்கல் செய்யலாம். அல்லது வேறு நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்யலாம். வழக்கை திரும்ப தருவதோ, நிராகரிப்பதோ, புதியதாக வழக்கை மறுபடியும் தயார் செய்து தாக்கல் செய்வதற்கு ஒரு தடையாக அமையாது.

நீதிமன்றங்கள் அசல் ஆவணங்கள் வழக்குரை உடன் தாக்கல் செய்யப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றன. அவ்வாறு எந்த கட்டாயமும் இல்லை. அசல் ஆவணம் ஏன் இல்லை என்பதற்கு காரணம் சொல்வது, அல்லது அசலை ஒப்புமை படுத்தி பார்த்துக் கொள்ள காட்டினால் கூட போதுமானது.

உரிமையியல் விசாரணை முறை சட்டம், மனித அறிவின் அற்புதமான உருவாக்கம். ஒரு முழுமையான விதிமுறை தொகுப்பு. அதில் எங்கேயும் வழக்கை எண் தருவதற்கு என்று தனிப்பட்ட விதிமுறைகளை வகுக்கவில்லை. வழக்கில் இருக்க வேண்டியது இருந்தால் போதும் என்பது தான் சொல்லப்பட்டுள்ளது. அதன் பிரிவு 9 சிவில் நீதிமன்றங்களுக்கு வரம்பற்ற அதிகாரத்தை வழங்குகிறது. மற்ற எந்த சட்டத்திலும் சிவில் நீதிமன்றம் இத்தகைய வழக்கை விசாரிக்க கூடாது என தடை செய்து இருந்தால் தவிர என்ன விதமான வழக்கையும் நாம் சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய முடியும்.

அதனால், இனி வழக்கினை தாக்கல் செய்யும் முன் மேலே கண்ட அடிப்படையான விசயங்களை கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி!

- த.செ.முசம்மில் மீரான். வழக்கறிஞர், திருவைகுண்டம்.


Dec 12, 2022

சட்ட புத்தகங்களை நம்பலாமா?

 எல்லாம் பொய்யா கோப்ப்பால்...

நிறைய சட்ட புத்தகங்கள் என் அலமாரியில் இருக்கிறது. உரிமையியல் விசாரணை முறை சட்டத்தின் தமிழ் விளக்கவுரை எழுத வேண்டும் என்று ஆரம்பித்ததில் இருந்து, அதன் பெரிய சைஸ் புத்தகங்களை எடுத்து பார்த்த பின்னர் தான் ஒரு விசயம் புரிந்தது. ஆங்கிலத்தில் உள்ள Bare Act களில் மத்திய அரசின் சட்டம் மட்டுமே இருக்கிறது தவிர மாநில அரசின் சட்ட திருத்தங்கள் கிடையாது. சரி, ஒருவேளை ஏடிசி, கிரி போன்ற பதிப்பங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு புத்தகங்களிலாவது இருக்குமா என்றால் அதும் இல்லை. ஆக இவ்வளவு நாள் ஆய்வின்றி ஒரு குருட்டு போக்கில் சட்ட புத்தகங்களை வாசித்திருக்கிறோம் என உணர்ந்த பின் தோன்றியது...

உதாரணமாக, கட்டளை 41 விதி 1 மேல்முறையீடு தாக்கல் செய்ய "Copy of Judgement" இணைக்க வேண்டும் என உள்ளது. இந்த copy என்ற வார்த்தைக்கு முன்பாக Certified என்கிற வார்த்தை சேர்க்க 1963 லேயே சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தில் திருத்தம் செய்து உள்ளது. ஆனால் சட்ட புத்தகத்தில் அவ்வாறு இல்லை.
 
13-08-2021 அரசிதழில் வந்தது முதலாக, இதே விதியில் "or Computerized" என்கிற வார்த்தை மட்டும் உயர்நீதிமன்றம் சட்ட திருத்தம் மூலம் சேர்க்கப்படுகிறது. அதை "mechanically reproduced" என்கிற பதம் இருப்பதற்கு அடுத்து சேர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. ஆனால் இந்த "mechanically reproduced" என்கிற பதமும் Bare Act புத்தகத்தில் இல்லை, அத்துடன் தமிழ் மொழிபெயர்ப்பிலும் இல்லை. அந்த வார்த்தைகள் இதற்கு முன்னர் எந்த ஆண்டு சட்ட திருத்தத்தில் சேர்க்கப்பட்டது என்பதும் நமக்கு தெரியாது.
 
நான் போன வருடம் வாங்கிய சட்ட புத்தகத்தில் இல்லையென்றால், நீதிமன்றத்தில் இருக்கும் பழைய சட்ட புத்தகங்களில் நீதிபதிகளுக்கு இது காணக் கிடைக்குமா?
 
இந்த விதியின் பொருள், மேல்முறையீடு தாக்கல் செய்ய தீர்ப்பின் சான்றிட்ட நகல் தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. அது Mechanically Produced (டைப் அடித்த அல்லது ஜெராக்ஸ்) ஆகவும் இருக்கலாம். Computerized (இணையத்தில் தரவிறக்கப் பட்ட நகல்) ஆகவும் இருக்கலாம். இல்லையா!
 
என்னிடம், நீதிபதியிடமும் உள்ள சட்ட புத்தகத்தில் இல்லாத ஒரு விதி உண்மையிலேயே இருக்கிறது. ஆனால் அதை எடுத்துக் காட்ட முடியாமல் எப்படி நாம் நீதிபதியிடம் அல்லது நீதிமன்ற ஊழியரிடம் புரிய வைக்க முடியும்? சொல்லுங்கள்.
 
நீதிபதி ஐயா இந்த விதிப்படி நான் மேல்முறையீடு செய்ய நீதிமன்ற சான்றிட்ட நகல் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கீழ் கோர்ட்டு நீதிபதியின் தீர்ப்பை ecourt இணைய தளத்தில் இருந்து தரவிறக்கி இத்துடன் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா?
 
இந்த விதியில் மதராஸ் உயர்நீதிமன்ற திருத்தங்கள் என்னவெல்லாம் செய்து உள்ளது. LawRato தளத்தில் கிடைத்தது.
 
Madras amendments in
Order XLI Rule 1
 
(i)
in sub-rule (1),
before, the word "copy", insert the word "certified"
 
(ii)
to sub-rule (1), insert the following words, namely:-
"The copy of the judgment shall be printed copy in every case in which the High Court has prescribed that the judgment shall be printed when a copy is applied for, for the purpose of appeal."
 
(iii)
in sub-rule (1) insert the following proviso, namely:-
"Provided that, in appeals from decrees or Order under any special or local Act to which the provisions or Parts II and III of the Limitation Act IX of 1908, do not apply and in which certified copies of such decrees or Orders have not been granted within the time prescribed for preferring an appeal, the Appellate Court may admit the memorandum of appeal subject to the production of the copy of the decree or Order appealed from within such time as may be fixed by the Court."
 
(iv)
in sub-rule (1), insert the following further proviso and Explanation, namely:
"Provided further that when the decree appealed from is a final decree in partition suit with Schedules attached thereto, the Appellate Court may dispense with the production of the copy of the decree, if the appellant filed a certified copy of the judgment appealed against and produces also a certificate from the Lower Court as to the value of the subject-matter of the proposed appeal."
"Explanation.-The words 'Appellate Court' in sub-rule (1) be deemed to include the Registrar of the High Court, where the appeal is preferred to the High Court." (w.e.f. 25-12-1963)
 
(v)
in sub-rule (2), at the end, insert the following words, namely:-
"The memorandum shall also contain a statement of the valuation of The appeal for the purposes of the Court-fees Act."
 
இவ்வளவு விஷயங்கள் என் புத்தகத்தில் இல்லை. உங்களிடமும் உள்ள புத்தகங்களிலும் தேடினாலும் இருக்கப் போவதில்லை. உயர்நீதிமன்ற தளத்திலும் எல்லா திருத்தங்களும் பதிவேற்றம் செய்யப் படுவதில்லை. இதனால் தான் referrence புத்தகங்கள் அவசியம் ஆகிறது. ஆனால் அவற்றை வருடா வருடம் வாங்கிட வசதிப்படாது. அல்லது சென்னை உயர்நீதிமன்ற திருத்தங்கள் மட்டும் சேர்க்கப்பட்ட சட்ட புத்தகம் எதும் இருந்தாலும் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தெரிவியுங்கள்.
 
ஆனா பாருங்க, மேலே Lawrato தளத்தில் கிடைத்த High court Amendments விவரங்களிலும், Mechanically Reproduced என்கிற வார்த்தை இல்லை என்பது பெரும் சோகம். அப்போஅது எப்போது சேர்க்கப்பட்டது எங்கே போய் தேடுவது?

இதே போல இன்னொரு விதி சென்னை உயர்நீதிமன்றம் , உரிமையியல் விசாரணை முறை சட்டத்துல சேர்த்து இருக்கு. ஆனா உங்க புத்தகத்துல இந்த விதி இருக்கப் போறது இல்லை. 2021 வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் நாள் அரசிதழ் ல வெளியானது முதல் இந்த விதி அமலுக்கு வந்தாகி விட்டது.
உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 20 இல் புதியதாக விதி 21 சேர்க்கப்படுது.

 " 21. Certified copies of decree to be furnished : Certified copies of decree shall be furnished to the parties on application to the court and at their expense as far as possible within thirty days from the date of receipt of the application."

நகல் மனு தாக்கல் செய்து 30 நாட்களுக்குள் உத்திரவின் சான்றிட்ட நகல் வழங்க வேண்டுமென இந்த விதி கூறுகிறது. அது நடக்குதோ இல்லையோ இப்படி ஒரு விதி இருப்பது நமக்கு, நீதிபதிகளுக்கு தெரியுமா?

அதனால், நான் Bare Act வெளியிட்டுள்ள Professional Publishers க்கும், தமிழ் மொழிபெயர்ப்பு செய்துள்ள ஐயா திரு.புலமை வெங்கடாசலம் அவர்களுக்கும் உயர்நீதிமன்ற திருத்தங்களை புத்தகத்தில் சேர்க்க கேட்டு கடிதம் எழுதினேன். புலமை வெங்கடாசலம் அவர்களிடம் இருந்து அழைப்பும் வந்தது. அடுத்த பதிப்புகளில் சேர்ப்பதற்கு முயற்சி செய்வதாக தெரிவித்து உள்ளார். நல்ல விஷயம்.

வாசிப்பிற்கு நன்றி! தொடர்வோம்..

 

- த.செ.முசம்மில் மீரான் 

    வழக்கறிஞர், திருவைகுண்டம்-தூத்துக்குடி.

 

  

 

விபத்து வழக்குகளை சமாதானமாக முடிக்கலாமா?

 இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304A


அவசரம் மற்றும் அஜாக்கிரதையால், குற்றமுறு கொலை அல்லாது, மரணத்தை விளைவிக்கும் நபர், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து, தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

 

விபத்தில் நபர் இறந்து விடுகிறார், இப்போது இறந்த நபரின் குடும்பம், குற்றம் சாட்டப்பட்ட நபருடன் சமாதானமாக போவதாக வழக்கினை முடித்துக் கொள்ள முடியுமா? 

Gian Singh -vs- State of Punjab என்கிற வழக்கில் இவ்வாறு முடிக்கப்பட்டாலும் கூட, அதன் பின் வந்த உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளில், இத்தகைய வழக்குகளை சமாதானமாக முடிக்க முடியாது என்பதே உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bhajan Lal Sharma -vs- State of NCT delhi வழக்கில் இவ்வாறு முடிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் என்றும்,

Sadha Singh -vs- State of Punjab வழக்கில், இவ்வாறு சமாதானம் செய்து கொள்ள அனுமதிப்பது, பணம் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என்ற என்னத்தை ஏற்படுத்தி விடும் என்றும்,

Hari Singh -vs- Sukhbir Singh வழக்கில், விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு காப்பீடு கிடைக்க பல சட்டப்பூர்வ வழிகள் உள்ளது. அதனால், குற்றம் சாட்டப்படும் நபரிடம் பணம் பெற்றுக் கொண்டு வழக்கை முடிக்க அனுமதிக்க முடியாது. உயிரை விலை பேசி விற்பது போல ஆகிவிடும். என்றும்,

State of Karnataka -vs- Sharanappa Basagouda Aregoudar  என்கிற வழக்கில், விபத்துகள் சமூகத்தின் மீதான குற்றம், இறந்தவர் குடும்பத்திற்கு பணம் கொடுப்பதால் வழக்கு ரத்தானால், குற்றவியல் நீதிமுறை கட்டமைப்பின் மீதே மக்களுக்கு நம்பிக்கை போய் விடும் என்றும்,

Dalbir Singh -vs- State of Punjab வழக்கில், தண்டனை என்பது குற்றம் புரிந்த நபருக்கும், மற்றவர்களுக்கும் சட்டத்தின் மீது அச்சத்தினை ஏற்படுத்த கூடியதாக இருக்க வேண்டும் என்றும், சொல்லப்பட்டுள்ளது.

அதனால், இது போன்ற அஜாக்கிரதை கவனக்குறைவு விபத்து மரண வழக்குகளை, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் முடிக்க கேட்டாலும், வழக்கை முடித்து தள்ளுபடி செய்வது கூடாது. 


- த.செ. முசம்மில் மீரான்,

    வழக்கறிஞர், திருவைகுண்டம், தூத்துக்குடி.

  

 

 


Nov 15, 2022

தாமதம் நீதியை கொன்று விடும்!

 கால வரையறை சட்டம் (Limitation Act) ஒவ்வொரு வழக்கு மற்றும் மனு தாக்கல் செய்வதற்கும், கால அளவை நிர்ணயித்து, அந்த காலம் எந்த நாளில் இருந்து கணக்கிடப்பட வேண்டும் என்பதையும் பட்டியல் இட்டுள்ளது.


அவ்வாறு உரிய காலத்திற்குள் தாக்கல் செய்யாது போனால், அச்சட்டத்தின் பிரிவு 5 இன் கீழ் தனியே, கால தாமதத்தை மன்னிக்க கேட்டு மனு செய்து கொள்ள முடியும்.

ஆனால் இந்த விதிவிலக்கான பிரிவு 5 ஆனது, வழக்குகள் தாக்கல் செய்யவோ அல்லது தீர்ப்புகளை செயல்படுத்த நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்வதற்கோ பொருந்தாது.

உதாரணமாக, ஒரு சொத்து மீட்பு வழக்கு தாக்கல் செய்ய, பிரச்சினை ஏற்பட்ட காலத்தில் இருந்து 12 ஆண்டுகள் கால வரையறை, அது போல ஒரு நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த நிறைவேற்றுதல்  மனு தாக்கல் செய்யவும் 12 ஆண்டுகள் கால வரையறை உள்ளது. இந்த கால நிர்ணயம் வழக்கின் தன்மையை பொறுத்து மாறும். 

பண வழக்குகள் தாக்கல் செய்ய, ஒப்பந்தம் அல்லது ஆவண தேதி அல்லது தவணை தேதி அல்லது இறுதியாக பணம் செலுத்தப்பட்ட அல்லது ஒப்புக் கொண்டு உயிர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டுகள் கால வரையறை. அதன் பின்னர் தாக்கல் செய்யும் வழக்குகள் ஏற்கதக்கது அல்ல.

நாம் பார்க்க போகும் இந்த வழக்கில் வாதிக்கு 3 ஆண்டுகள் கால வரையறை முடிந்து, அதன் பின் 375 நாட்கள் தாமதம் ஆகி விட்டது. வழக்கு தாக்கல் செய்யும் போது தனது தாமதத்தையும் மன்னிக்க கேட்டு வாதி பிரிவு 5 இன் கீழ் மனுவுடன் சேர்த்தே பிராதை தாக்கல் செய்கிறார்.


உச்சநீதிமன்றம் வரை போய், கால வரையறை முடிந்த பின்னர் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றும், இதே நிபந்தனை உரிமையியல் விசாரணை முறை சட்டம் கட்டளை 21 இன் கீழ் வருகிற நிறைவேற்றுதல் நடவடிக்கை களுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டு, வாதியின் வழக்கு நிராகரிக்க பட்டது சரியென உத்தரவிட பட்டது.

கால வரையறை என்பது உரிமையியல் வழக்குகளின் அடிப்படை. காலம் கடந்த வழக்குகளை நீதிமன்றம் துவக்கத்திலேயே நிராகரித்து விட முடியும். Limitation Defeats Equity எனப்படும். வழக்கு கொண்டு வருபவரின் பக்கம் எவ்வளவு நியாயம் இருந்தாலும் சரி, அவர் சட்டத்தில் குறிப்பிட்ட காலத்தை கடந்து வழக்கு தாக்கல் செய்தால் அது நிராகரிக்க பட வேண்டியது என்பதாகும். 

" Vigilantibus non dormientibus aequitas subvenit" - இந்த லத்தீன் பதத்தின் பொருள் "சட்டம் விழிப்புடன் இருப்பவருக்கு துணை நிற்கிறது. தூங்குபவருக்கு உதவுவது இல்லை" (Equity assists the vigilant and not those who sleep on their rights)

வழக்கு தாக்கல் செய்ய மட்டும் தான் கால வரையறை சட்டமா, வழக்கு முடிக்க எந்த கால வரையறையும் இல்லையா என்று கேட்டால், இருக்கிறது ஆனால் (செயலில்) இல்லை... 😐

இந்த பதிவினை காணொளி ஆக முகநூல் பக்கத்தில் காணலாம்.

தங்களின் வருகைக்கும், வாசிப்பிற்கும் நன்றி!

- த. செ. மீரான், வழக்கறிஞர், திருவைகுண்டம்.
தொடர்பு கொள்ள @advmeerantj